Published : 14 Mar 2020 09:35 PM
Last Updated : 14 Mar 2020 09:35 PM

ஒப்புக்கொண்டப்படி மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும்: ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

துணி மற்றும் ஆயத்த ஆடை மீதான வரியானது 5%-லிருந்து 12%-ஆக உயர்த்துவதும், உரங்கள் மீதான வரியினை 5%-லிருந்து 12%-ஆக உயர்த்துவதும் ஏற்புடையது அல்ல என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எதிர்ப்பை தமிழகம் பதிவு செய்தது.

39-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டமானது இன்று (14.3.2020) புது டில்லியில் நடைபெற்றது.அமைச்சர் ஜெயக்குமார் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். முதன்மைச் செயலாளர்/வணிகவரி ஆணையரும் கலந்து கொண்டார்.

இன்றைய கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 2017-2018-ஆம் ஆண்டிற்கு வரப்பெற வேண்டிய ஜிஎஸ்டி தொகை மற்றும் நடப்பு நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையினை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தினார்.

ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையினை ஐந்தாண்டுகளுக்கு வழங்கிட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

இன்றைய கூட்டத்தில், சட்டக்குழுவின் (Law Committee) பல்வேறு பரிந்துரைகள் விரிவான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், குறிப்பாக வணிகர்களுக்கான ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைபடுத்துவதற்கும் மற்றும் வருவாயினை பெருக்கிடுவதற்கும், ஜிஎஸ்டிசட்டம் மற்றும் விதிகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

வரி செலுத்துவோர் தாமதமாக வரி செலுத்தும் நேர்வில் நிகர இருப்பின் மீது (net cash) வட்டியானது விதிக்கப்படுவதற்கு அண்மையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சலுகையானது 1.7.2017 முதல் முன்தேதியிட்டு வரி செலுத்துவோருக்கு வழங்கிட வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும் என இன்றைய கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.

ஆண்டொன்றுக்கு ரூ.2 கோடிக்கு மேல் மொத்த விற்பனை அளவு கொண்டுள்ள வரி செலுத்துவோர் அனைவரும் ஆண்டு கணக்கு விவர அறிக்கையினை தாக்கல் செய்திட வேண்டும். இந்த வரம்பினை 2018-2019-ஆம் ஆண்டிற்கு மட்டும் ரூ.5 கோடியாக உயர்த்திட சட்டக்குழு பரிந்துரைத்திருந்தது, இது சிறு வணிகர்களுக்கு பயன் அளிக்கும் என்பதால், இதனை அமைச்சர் ஏற்கலாம் என தெரிவித்தார்.

கணக்கு விவர அறிக்கையோடு வரியினை செலுத்தாத நேர்வில், பதிவுச் சான்று ரத்து செய்யப்பட்டுள்ள வணிகர்களுக்கு, அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், அவர்களுடைய பதிவுச் சான்றினை திரும்பப்பெறுவதற்கு விரைந்து ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என கருத்தை அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய கூட்டத்தில் முன் வைத்தார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் ஜவுளி, காலணி, செல்பேசி, உரங்கள் போன்ற பொருட்கள் தலைகீழான வரி கட்டமைப்பு (inverted rate structure) கொண்டுள்ளன. இதனால் தொழில் புரிவோர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவதுடன் வரி திருப்புத் தொகையும் (refund) வழங்கப்பட வேண்டியுள்ளது. இதனை சீர் செய்யும் விதமாக Fitment Committee--ன் பரிந்துரைகள் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.

இந்த கருத்துருக்களில் துணி மற்றும் ஆயத்த ஆடை மீதான வரியானது 5%-லிருந்து 12%-ஆக உயர்த்துவது ஏற்புடையது அல்ல என அமைச்சர் அவர்கள் தனது கருத்தினை முன்வைத்தார்கள். உரங்கள் மீதான வரியினை 5%-லிருந்து 12%-ஆக உயர்த்துவது குறித்த கருத்துருவும் விவாதிக்கப்பட்டது. ஆனால், வரி உயர்வினால் உரங்கள் மீதான விலை அதிகரிக்கும் என்பதால் இந்த கருத்துரு முற்றிலும் ஏற்புடையதாக இல்லை என தனது எதிர்ப்பினை அமைச்சர் பதிவு செய்தார்.

கையினால் செய்யப்படும் தீக்குச்சிகளுக்கு 5 %மற்றும் இயந்திரம் கொண்டு தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கு 18% தற்போது வரி விதிக்கப்படுகிறது. இதனை ஒரே சீராக 12% வரி விதிக்கலாம் என்ற தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையின் மீது விரைந்து முடிவெடுக்குமாறு மன்றக் கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தினார்.

உணவு தானியங்களை விற்பனை செய்யும் வணிகர்கள் உறுதிமொழி பத்திரத்தினை (affidavit) காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் நேர்வுகளில், அவ்வாறான காலதாமதத்தினை பொறுத்தருள வேண்டி ஒரு கருத்துருவினை மன்றத்தின் பரிசீலினைக்காக அமைச்சர் முன் வைத்தார்.

இன்றைய கூட்டத்தில் வணிகப் பிரிதிநிதிகள், வணிக சங்கங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரப்பெற்றுள்ள மேலும் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகளான கைத்தறி பொருட்கள்; கொள்கலனில் அடைக்கப்பட்டு வணிகச் சின்னம் இடப்பட்ட அரிசி மற்றும் இதர உணவு தானியங்கள்; ஜவ்வரிசி; ஊறுகாய்; வெண்ணெய்; நெய்; விவசாயக் கருவிகள்; ஜவுளித் தொழிலில் பயன்படும் இயந்திர பாகங்கள்; பம்பு செட்டுகள்; மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள்; மரவள்ளிக் கிழங்கு ஸ்டார்ச்; வணிக சின்னமிடப்படாத நொறுக்கு தீனிகள்; பேக்கரி பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள்; பல்வேறு வகையான வத்தல்கள்; பிஸ்கட்டுகள்; உரம், நுண் ஊட்டச் சத்துகள், பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சை கொல்லிகள்; கற்பூரம்; காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா, மஞ்சள் போன்றவை மற்றும் அதன் பொடிகள்; சீயக்காய்; கடித உறை, அட்டைகள், டயரிகள் பயிற்சி குறிப்பு மற்றும் கணக்கு புத்தகம் போன்ற காகிதப் பொருட்கள்; காதிப் பொருட்கள்; வெளுப்பதற்கான திரவம்; பவானி தரைவிரிப்பு; மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்; வேப்பம் பிண்ணாக்கு; அரிசி தவிடு மீது வரி விலக்கு அல்லது எதிரிடை கட்டணமாக மாற்றல்; வெள்ளி மெட்டி, தாலி போன்றவை; அலுமினிய பாத்திரங்கள் மற்றும் அலுமினிய கழிவுகள்; பட்டு நூல் மற்றும் சரிகை; தேங்காய் நார் பொருட்கள்; இரப்பர் கலந்த நாரினால் செய்யப்பட்ட மெத்தைகள்; பேக்கரியில் பயன்படும் ஈஸ்ட்; சுருட்டு;கொள்கலனில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்; கோவில்களில் உபயோகிக்கப்படும் வாகனம், தேர், திருவட்சி ஆகியவை; மொறுமொறுப்பான ரொட்டித்துண்டு (ரஸ்க்); நன்னாரி சர்பத்; பனஞ்சர்க்கரை; பப்பாளி மிட்டாய்; காலர் துணி; சாம்பிராணி; பனைநார் மற்றும் மட்டைகள்; கோரைப் பாய்; பயோ டீசல்; சல்லா துணி மற்றும் கட்டு போடும் துணி; துணி பை;மெழுகுவர்த்திகள்; சங்கு மற்றும் கடல் சிப்பியாலான கைவினைப் பொருட்கள்; கையால் செய்யப்பட்ட இரும்பு பெட்டி; கையால் செய்யப்பட்ட பூட்டு; கையால் செய்யப்படும் தீப்பெட்டிகள் மற்றும் இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் ஆகியவற்றிற்கு 12 சதவீத வரி விதித்தல்.

விவசாய நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளுக்கு வரி விலக்களித்தல்; மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்களித்தல்; சிட் நிதி தொடர்பான சேவைகளுக்கு மற்றும் ஆயுள் இன்சுரன்ஸ் பிரிமியம் மீது விலக்களித்தல்; நெல் குத்தகை சேவைகளுக்கு வரி விலக்களித்தல்; நுண்நீர் பாசன கருவிகளுக்கு வரிவிலக்கு; மற்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு வரி விலக்கு ஆகியவை வழங்கப்பட வேண்டுமென இன்றைய கூட்டத்தில் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x