Published : 14 Mar 2020 08:55 PM
Last Updated : 14 Mar 2020 08:55 PM

சிஏஏ விவகாரம்; அனைத்து அரசியல் கட்சிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவேண்டும்: தலைமைச் செயலாளரிடம் இஸ்லாமிய கூட்டமைப்புகள் வலியுறுத்தல்

சிஏஏ விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர் தலைமையில் நடந்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் தலைவர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு ஆலோசனைகளை கூட்டமைப்பு வழங்கியுள்ளது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் முதல்வர் ஆலோசனை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிராக இந்தியா முழுதும் சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சிகள் திரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர். எதிர்க்கட்சிகள், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என்பிஆரை பழைய வடிவத்தில் அமல்படுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து வருகிறது. இந்நிலையில் இந்தப்பிரச்சினை குறித்து தலைமைச் செயலர் தலைமையில் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் தலைவர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்துக்கொண்டன.

அதுகுறித்து கூட்டத்துக்குப்பின் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

“என்பிஆர், என் ஆர்சி, சிஏஏ குறித்து பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை களைய தலைமைச் செயலாளர் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கலந்து கொண்டது.

அந்தக் கூட்டத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம். அவை பின்வருமாறு:

1. என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ ஆகிய மூன்றையும் எதிர்க்கும் அனைத்து அமைப்புகள், கட்சி மற்றும் தலைவர்களின் குறித்து தமிழக அரசின் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

2. தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று இருக்கும் சூழலில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் மத்திய அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற இயலாது என தெரிவித்துள்ளார். ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படாத நிலையில் அதை நடைமுறைப்படுத்த இயலாது என்று மாநில அரசு முடிவு எடுப்பதில் எந்த சட்ட மீறலும் நிகழப்போவது இல்லை.

அரசமைப்புச் சட்டத்திற்கோ, நாடாளுமன்றம் தன் எல்லைக்கு உட்பட்டு இயற்றிய சட்டத்திற்கோ எதிரானக இதைக் கருத இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

3. குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019 இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பான மதசார்பற்ற கோட்பாட்டிற்கு எதிரானது. சமத்துவ கோட்பாட்டிற்கு, மத சார்பற்ற கட்டமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க கோரி மாநில அரசுகள் உட்பட பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இந்தியா முழுக்க இச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமைச் சட்டம் வயது 1955-ல், 2003-ல் திருத்தப்பட்டுள்ளது. 2019-ல் திருத்தப்பட்டக் கூறுகள் மக்கள் மனங்களில் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

பதட்டமான சூழ்நிலையில் வழக்கை விசாரித்ததே கடினம் என உச்சநீதிமன்றம் கூறிய சூழலில் மக்கள் மனங்களில் உருவாகியுள்ள பதட்டத்தையும், பயத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அரசு தன்னிச்சையான ஒரு முடிவு எடுத்து நடைமுறை படுத்த முயல்வது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது.

இத்தகைய சூழ்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் 2019 திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் காலங்காலமாக இந்தியாவில் வாழும் மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் நடைமுறைபடுத்த மாட்டோம் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

4. சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய மூன்று சட்டங்களுக்கும் எதிராக நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டங்கள் யாருடைய தூண்டுதலின் பேரிலும் நடைபெறக் கூடியது அல்ல என்பதை நாங்கள் அரசின் கவனத்திற்கு அறிய கூறுகிறோம்”.

இவ்வாறு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தங்களது மனுவில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x