Published : 14 Mar 2020 07:34 PM
Last Updated : 14 Mar 2020 07:34 PM

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை போல மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு மேம்படுத்தப்படுமா?- கிடப்பில் ரூ.100 கோடி மருத்துவக் கட்டிடம் 

மதுரை

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை போல மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு மேம்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தென் தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இருந்தும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கு நோயாளிகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

சென்னை அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அடுத்து, தமிழகத்தில் இந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் மருத்துவ சிகிச்சைப்பிரிவு முக்கியத்துவம் வாய்ந்தது.

மதுரையைவிட்டால் மற்ற மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சைப்பிரிவுகளில் போதிய வசதியில்லை. அதனால், அந்த மருத்துவமனைகளில் இருந்து அதிகளவு மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

ஆனால், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இருக்கும் சர்வ தேச தரம் வாய்ந்த மருத்துவ அறுவை சிகிச்சை பிரிவுகள், அரங்குகள், சாதனங்கள் மற்றும் போதுமான மருத்துவர்கள் இங்கு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

நீண்ட நாள் எதிர்பார்ப்பான குழந்தைகளுக்குஆராய்ச்சி மருத்துவப்பிரிவு இன்னும் தொடங்கப்படவில்லை. பழைய அறுவை சிகிச்சை அரங்கிலே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதால் விரைவாக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியவில்லை.

அறுவை சிகிச்சைக்காக குழந்தைகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், சில முக்கிய சிக்கலானஅறுவை சிகிச்சைகளுக்கு குழந்தைகள் காத்திருக்க முடியாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் குழந்தை உடல்நலம், அவர்களது பெற்றோர்கள் பொருளாதார நிலை போன்றவற்றால் சென்னை எழும்பூர் நல மருத்துவமனைக்கும் செல்லமுடியவில்லை.

ஆனால், வேறு வழியில்லாமல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சில சிக்கலான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சப்பிரிவுகளில் சிகிச்சைப்பெறும் குழந்தைகள் இறக்கும் நிகழ்வுகளும் அவ்வப்போது ஏற்படுகிறது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள குழந்தைகள் நலப்பிரிவை இடித்து விட்டு சுமார் ரூ.100 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நலப்பிரிவை போல் 6 மாடிகள் கொண்ட அதிநவீன உலக தரவாய்ந்த அரங்குகள், மருத்துவ உபகரனங்கள் ஏற்படுத்தப்படுத்த போவதாக அறிவிப்பு வெளியானது.

திட்டமும் தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், தற்போது வரை இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெண்கள் குழந்தைகள் நல ஆர்வலர் வெரோணிக்காமேரி கூறியாதாவது; ”கடந்த 2015 முதல் 2019 நவம்பர் வரையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவில் 10,046 அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 6,488 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது.

அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 2015 முதல் 30.11.2019 வரையிலான 5 ஆண்டுகளில் 378 குழந்தைகள் இறந்துள்ளனர்.

அதனால், இந்த மரணங்களை தடுக்க, சென்னை எழும்பூரில் இருப்பதை போன்ற மருத்துவ வசதிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவமனையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இதயம், இரைப்பை, ரத்தம், தோல், சிறுநீரகம், நரம்பியல், நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கத் தனித்தனியாக சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

பச்சிளம் குழந்தைகளுக்கான நியோ நேட்டாலஜிஸ்ட் துறை மருத்துவர்களும் இருக்கிறார்கள். பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு புற்றுநோய், ரத்தநாள நோய்கள், கல்லீரல், மற்றும் சிறுநீரகம் உட்பட அனைத்துப் பிரச்னைகளுக்கும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அறுவைசிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்குச் சிகிச்சையளிக்கவும் இங்கே தனித்தனித் துறைகள் செயல்படுகின்றன. ஆனால், மதுரை குழந்தைகள் நல மருத்துவமனையில் போதிய கட்டிட வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

மதுரை மாநகரம் தற்பொழுது மருத்துவ சுற்றுலா நகரம் போல முக்கியத்துவம் பெற்றுவருகிறது. அதிநவீன தனியார் மருத்துவமனைகள் நகரில் பல ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கெல்லாம் கிராம புறங்களில் உள்ள ஏழைகளால் கட்டணம் கட்டமுடியாது.

அவர்களுக்கெல்லாம் ஒரே நம்பிக்கை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைதான். குழந்தைகள் நலப்பிரிவை சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையை போல அதிநவீனமாக மாற்றி அமைத்து உலகதரத்திற்கு இப்பிரிவை ஏற்படுத்தவேண்டும்.

இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும்பரிந்துரைகள் செய்வதை நிறுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x