Published : 14 Mar 2020 06:03 PM
Last Updated : 14 Mar 2020 06:03 PM

கரோனா அச்சம்; ரயில் பயணிகளுக்கு முகக் கவசம்: தமாகா இளைஞரணி சார்பில் யுவராஜா வழங்கினார் 

ஈரோடு ரயில் நிலையத்தில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா ரயில் பயணிகளுக்கு முகக் கவசம் வழங்கினார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 85 பேர் கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிட் - 19 வைரஸ் அச்சுறுத்தலால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள், மற்றவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முகக் கவசம் அணிவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு முகக் கவசம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியின் சார்பில் ரயில் பயணிகளுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது முகக் கவசத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. முன்பு இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட முகக் கவசம் தற்போது 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் விலைக்கு முகக் கவசத்தை விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகள், ரேஷன் கடைகளில் முகக் கவசத்தை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x