Last Updated : 14 Mar, 2020 03:51 PM

 

Published : 14 Mar 2020 03:51 PM
Last Updated : 14 Mar 2020 03:51 PM

கரோனா அச்சம் எதிரொலி: சபரிமலையில் சில நிமிடங்களிலேயே தரிசனம் முடித்துக் கிளம்பிய பக்தர்கள்

கோவிட்-19 எனப்படும் கரோனா வைரஸ் தாக்கத்தினால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை மிக மிகக் குறைவாகவே உள்ளது.

அச்சத்தையும் மீறி கோயிலுக்கு வந்த சிலரும் நேரடியாக சன்னிதானத்திற்குச் சென்று சில நிமிடங்களிலே தரிசனம் முடிந்து விட்டு கிளம்பிச் சென்றனர்.

ராசிகளின் அடிப்படையில் மலையாள மாதங்கள் அழைக்கப்படுவது வழக்கம். இதனடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதக் கடைசி நாளில் நடைதிறக்கப்பட்டு வருகின்றன. இதன்படி நேற்று கும்பம் மாத இறுதிநாளில் நடைதிறக்கப்பட்டது.

தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி சுதிர்நம்பூதரி நடைதிறந்து பக்தர்களுக்கு விபூதிப்பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து மாளிகைப்புரத்து அம்மன் கோயிலை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதரி திறந்துவைத்தார்.

தற்போது கோவிட்-19 வைரஸ் பரவி வருவதால் கேரளாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி, திரையரங்குகள், சுற்றுலா மையங்ங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமானோர் வருவதால் நோய் பரவல் அதிகரிக்கும் என்பதால் பக்தர்கள் கோயிலுக்கு வரவேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானத் தலைவர் வாசு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன்படி பம்பையில் உள்ள கடைகள்,ரூம்கள் அடைக்கப்பட்டிருந்ததுடன், சன்னிதானத்தில் உள்ள பிரசாத ஸ்டால்களும் மூடப்பட்டிருந்தன. பம்பை வரை இயக்கப்படும் கேரள அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இருப்பினும் பக்தர்கள் சிலர் தங்கள் வாகனங்களில் ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்திருந்தனர்.

கூட்டம் இல்லாமல் இருந்ததால் வரிசையில் நிற்காமல் நேரடியாக சன்னிதானத்தை அடைந்து சில நிமிடங்களிலே தரிசனம் செய்து கிளம்பினர். அடுத்தடுத்து பக்தர்கள் வராததால் இன்று பகல் முழுவதும் கோயில் வளாகம் வெறிச்சோடிக் கிடந்தது.

கோயிலில் நிர்மால்ய தரிசனம், உச்சபூஜை, சந்தன, நெய் அபிஷேகம், கலசாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் எதுவும் நடைபெறவில்லை. வரும் 18-ம் தேதி மீண்டும் நடை சாத்தப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x