Published : 14 Mar 2020 03:08 PM
Last Updated : 14 Mar 2020 03:08 PM

தமிழிசையைத் தவறாகச் சித்தரித்துப் புகைப்படம்: சமூக வலைதளங்களில் பிரபலமான மன்னை சாதிக் கைது

மன்னை சாதிக் - தமிழிசை சவுந்தரராஜன்: கோப்புப்படம்

திருவாரூர்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் படத்தை சமூக வலைதளங்களில் தவறாகப் பதிவிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பிரபலமான மன்னை சாதிக் பாட்ஷா என்பவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்..

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (34). இவர் மன்னை சாதிக் என்ற பெயரில் வலைதளங்களில் தனது கருத்துகளை வித்தியாசமான முறையில் பதிவிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். இதன் காரணமாக சினிமாவில் துணை நடிகராகவும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'களவாணி', 'நட்பே துணை', 'கோமாளி' உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

இந்நிலையில், அவருடைய முகநூல் பக்கத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து தவறாகச் சித்தரித்து அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன், மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மன்னார்குடி போலீஸார் சாதிக் பாட்ஷாவை நேற்றிரவு (மார்ச் 13) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாதிக் பாட்ஷா, மன்னார்குடி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டு, மன்னார்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x