Published : 14 Mar 2020 10:50 AM
Last Updated : 14 Mar 2020 10:50 AM

திண்டுக்கல்லில் முதல்வர் பங்கேற்கும் விழா அரங்குக்குள் சானிட்டைசர் பயன்பாட்டுக்குப் பின் அனுமதிக்கப்பட்ட பொது மக்கள்

திண்டுக்கல்லில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிலையில் இந்த விழாவிற்கு வந்திருந்த மக்கள் அனைவருக்கும் கையில் சானிட்டைசர் ஊற்றி சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

திண்டுக்கல்லில் ரூ.325 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.
இன்று காலை நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

கட்சித் தொண்டர்கள் வாயிலில் சானிட்டைசர் பாட்டில்களுடன் நின்று கொண்டிருக்க விழாவுக்கு வந்த மக்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் சானிட்டைசர் ஊற்றப்பட்டது.

அவர்கள் சானிட்டைசரால் கைகளை சுத்தப்படுத்தியதை உறுதி செய்த பின்னரே விழா அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவிவருவதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. பொதுவாகவே கூட்ட நெரிசலைத் தவிர்க்க உலக சுகாதார மையமும் அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், திண்டுக்கல்லில் முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாவிற்கு வாருகை தந்த மக்களுக்கு சானிட்டைசர் பயன்பாடு வலியுறுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x