Last Updated : 14 Mar, 2020 07:41 AM

 

Published : 14 Mar 2020 07:41 AM
Last Updated : 14 Mar 2020 07:41 AM

மணல் தட்டுப்பாட்டைப் போக்க தொடர் நடவடிக்கை; மலேசிய மணலுடன் 10-வது கப்பல் வருகை: எம்-சாண்ட் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பு

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட் டைப் போக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சம் மெட்ரிக் டன் வெளிநாட்டு மணல் விற்பனையாகியுள்ள நிலையில், மலேசியாவில் இருந்து 50 ஆயிரம் டன் மணலுடன் 10-வது கப்பல் வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் தினமும் 15 ஆயிரம் லாரி லோடு மணல் தேவை என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. ஆற்றுமணல் முன்புபோல எடுக்கப்படுவதில்லை. தஞ்சை, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் மணல் எடுக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

15 மணல் குவாரிகள்

தற்போது திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 15 மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து தினமும் 1,500லாரி லோடு மணல் விற்பனையாகிறது. ஒரு லாரி லோடு என்பது 200 கனஅடி (2 யூனிட்) ஆகும். ஒரு யூனிட் மணலுக்கு ரூ.1,330 என அரசு விலை நிர்ணயித்துள்ளது.

ஆற்று மணல் தற்போது போதிய அளவு கிடைக்காததால் கட்டுமானத் தொழில்புரிவோரும், பொதுமக்களும் எம்-சாண்ட்டை (நொறுக்கப்பட்ட கல்மணல்) அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். தமிழக பொதுப்பணித் துறை சான்று அளித்த 216 எம்-சாண்ட் தயாரிப்பு நிறுவனங்களில் தினமும் 15 ஆயிரம் லாரி லோடு எம்-சாண்ட் தயாரிக்கப்படுகிறது. ஒரு யூனிட் எம்-சாண்ட் ரூ.4,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க 2018-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி மணல் ஒரு யூனிட் விலை ரூ.10,013. இதுவரை 9 கப்பலில் வந்த சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் வெளிநாட்டு மணல் முழுவதும் விற்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் தினமும் ஆற்று மணல் 1,500 லாரி லோடும், எம்-சாண்ட் 15 ஆயிரம் லாரி லோடும், இறக்குமதி செய்யப்பட்ட மணல் 200 லாரி லோடும் விற்பனைக்கு தயாராக உள்ளன. தேவைக்கு அதிகமாகவே மணல் இருப்பதால் தட்டுப்பாடு இல்லை.

ஆன்-லைன் மூலமாக மணல்விற்கப்படுவதால், பொதுமக்களுக்கு ஒரு வாரத்துக்குள் உரியவிலையில் கிடைக்கிறது. குவாரிக்கு அருகிலேயே மணல் டெப்போ அமைத்திருப்பது, இரண்டு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் மணல் லாரிகள் போக்குவரத்து கண்காணிப்பு உட்பட பல்வேறுவழிகளில் மணல் விற்பனை முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது. தவறு செய்த மணல் ஒப்பந்ததாரர்கள் 3 பேர் மீது முதல் தகவல்அறிக்கை (எப்ஐஆர்) பதியப்பட்டுள்ளது. தவறு செய்த அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மணல் விற்பனை புகார்களை விசாரிக்க சென்னை ஐஐடி பேராசிரியர், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், ஹைட்ரோ ஜியாலஜிஸ்ட், மணல் விற்பனை திட்ட இயக்குநர் ஆகியோர் கொண்ட கண்காணிப்புக் குழுவை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. புகார் வந்ததும், சம்பந்தப்பட்ட இடத்துக்கு இக்குழு சென்று ஆய்வு செய்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது. இதுவரை 10 மணல் குவாரிகளை இக்குழு ஆய்வு செய்திருக்கிறது.

மாட்டு வண்டியில் அடிக்கடி வந்து மணல் வாங்கிச் செல்கின்றனர் என்ற புகாரையடுத்து, மணல் குவாரி இயங்கும் மாவட்டங்களில் உள்ள மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கங்களுடன் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாட்டு வண்டி வைத்திருப்பவரின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு,மாட்டு வண்டி போக்குவரத்து நவீன முறையில் கண்காணிக்கப் படுகிறது. சென்னையில் உள்ள 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை மூலம் மொத்த மணல் குவாரிகளும் கண்காணிக்கப்படுகின்றன. மணல் விற்பனை புகாருக்கு 95662 22479 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மத்திய அரசு பாராட்டு

மணல் விற்பனையை நவீனதொழில்நுட்பத்தில் முறைப்படுத்தி யதற்காக தமிழக அரசை மத்திய அரசு பாராட்டியதுடன், மத்திய அரசு ஜனவரியில் வெளியிட்ட ‘மணல் குவாரிக்கான வழிகாட்டுதல்கள் 2020’ என்ற புத்தகத்தில், மணல் விற்பனையில் தமிழகம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் பின் பற்றும் நடைமுறையை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x