

சசிபெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
சேலம் அருகேயுள்ள இமேட்டுக்காட்டில் வைக்கப்பட்டுள்ள சசிபெருமாள் உடலுக்கு ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சசிபெருமாள் மனைவி மகிழத்தை சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின், திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை அளித்தார்.
சசிபெருமாள் மரணத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் மறைந்த சசிபெருமாள் குடும்பத்துக்கு திமுக எப்போதும் துணையாக இருக்கும் என்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
"இன்று மாலை ஆளுநர் ரோசய்யாவிடம் திமுக சார்பில் திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் மனு அளிக்க உள்ளார். அதில், சசிபெருமாள் மரணம் குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டும்.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடி, புழல் சிறையில் அடைக்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கருணாநிதி கூறியுள்ளார்.
சசிபெருமாள் என்ன நோக்கத்திற்காக போராடினாரோ அந்த நோக்கம் நிறைவேற திமுக பாடுபடும். 2016ல் திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்" என்று ஸ்டாலின் கூறினார்.