Published : 12 Mar 2020 08:49 PM
Last Updated : 12 Mar 2020 08:49 PM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மாணவர், பெற்றோர் பெயர் அச்சிடப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்  

பள்ளிக் கல்வித் துறை மானியக்கோரிக்கையை ஒட்டி சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் நடத்தப்படும் கணினி வழி தேர்வுகளை வலுப்படுத்திட IIT, MIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இன்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

1. 1,575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக, ஆண்டு ஒன்றிற்கு ரூ 1.11 கோடி கூடுதல் செலவில் தரம் உயர்த்தப்படும்.

2. பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே உள்ள திறமைகளை, பிறருடன் பகிர்ந்துகொள்ளும் வகையில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும், மாணவர்களின் நலனுக்காக, ரூ. 82.34 இலட்சம் செலவில், பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

3. அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 12.84 கோடி செலவில் தோற்றுவிக்கப்படும்.

4. சிறைவாசிகளுக்கான சமநிலைக் கல்வித் திட்டம் ரூ. 20.33 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

5. வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறும் மாவட்டங்களில், வயது வந்த கற்போர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு வழங்குவதுடன், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திட ஏதுவாக, தொழிற்திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படும்.

6. பொதுத் தேர்வுகளுக்கு தரம் மேம்படுத்தப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் ரூ. 13.50 கோடி செலவில் வழங்கப்படும்.

7. செயல்வழி பயன்பாட்டுக் கற்றல் மற்றும் புதுமை மையங்கள் ரூ. 2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

8. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் வளர்ச்சியினை ஊக்குவித்தல் என்ற திட்டம் ரூ. 2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

9. சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒலி வடிவில் பாடநூல்கள் ரூ. 30 இலட்சம் செலவில் தயாரித்து வழங்கப்படும்.

10. மாணவர்களின் திறனை வெளிக்கொணர்வதற்கு ஏற்றவாறு வினாத்தாள் தயாரிப்பதற்காக ரூ.39.41 இலட்சம் செலவில், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

11. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ. 4.93 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

12. மாணவர்களின் படைப்பாற்றல், கலை உணர்வு, தனித் திறமைகளை மிளிரச் செய்யும் வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வண்ணத் திருவிழா ரூ. 5 இலட்சம் செலவில் நடத்தப்படும்.

13. அரசு பள்ளிகளில் 2 மற்றும் 3ஆம் வகுப்புகளில் பயிலும், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, குறைதீர் கற்றல் பயிற்சி புத்தகம் ரூ. 1 கோடியே 65 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.

14. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் கல்வி அறிவையும், அவர்களது உடல் மற்றும் மனவலிமையையும் மேம்படுத்தும் வகையில், சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் உடல் இயக்க வல்லுநர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி ரூ. 19.76 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

15. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பயிற்சியை மேம்படுத்த, நவீன கற்றல் மற்றும் உடல் இயக்க உபகரணங்கள் ரூ. 82.20 இலட்சம் செலவில், வழங்கப்படும்.

16. டி.பி.ஐ. வளாகத்தில் ரூ. 9 இலட்சம் செலவில் நூலகம் அமைக்கப்படும்.

17. 120 மாதிரி பள்ளிகளில், நூல்கள், வார இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் கொண்ட தகவல் களஞ்சியங்கள் ரூ. 30 இலட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

18. அனைத்து நூலகங்களிலும், குடும்ப நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

19. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், நூலகத்தை அதிக நேரம் பயன்படுத்திய மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் ரூ. 1.50 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

20. மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஆசிரியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் ரூ. 2.50 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

21. குடியிருப்பு வளாகங்களில் சமுதாய நூலகம் அமைக்கப்படும்.

22. சென்னை அண்ணாநகர் (கிழக்கு) நூலகத்திற்கு புதியதாக இணைப்புக் கட்டடம் ரூ. 75 இலட்சம் செலவில் கட்டப்படும்.

23.வாசகர் பயன்பாடு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 17 நூலகக் கட்டடங்கள் ரூ. 1 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

24. மத்திய மற்றும் மாநில அரசின் விருது பெற்ற தமிழ் நூல்களை நூலகங்களுக்கு வாங்கும் திட்டம் ரூ. 60 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

25. இயற்கை எய்திய நூலகப் பணியாளர்களின் நூல் இழப்பிற்கான அபராதத் தொகை ரத்து செய்யப்படும்.

26. கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தையல், இசை மற்றும் ஒவியம் ஆகிய பாடங்களை பயிற்றுவிக்க தேவையான உபகரணங்கள் வழங்கும் திட்டம் ரூ. 8.29 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

27. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

28. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில், மாணவர்களின் பெயருடன் பெற்றோர்களின் பெயர்களை அச்சிட்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

29. மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளையும், தனித்துவமான கலைத் திறன்களையும் வளர்க்கும் வண்ணம் கலை, இலக்கியப் போட்டிகளும் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தினை ஊக்குவித்திட பாரம்பரிய உணவுத் திருவிழாவும் ரூ. 5 கோடி செலவில் நடத்தப்படும்.

30. மனத்திறன் தேர்வு மற்றும் படிப்பறிவுத் திறன் தேர்விற்கான மாதிரி வினா-விடை கையேடு வழங்கும் திட்டம் ரூ. 20.08 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

31. மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதற்கும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் ஏற்ப மேல்நிலைப் பள்ளிகளில் மூன்று அல்லது நான்கு முதன்மைப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விதமாக, பாடத் தொகுப்புகள் மேம்படுத்தப்படும்.

32. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கும் திட்டம் ரூ. 27 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

33. ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளை நடத்திடும் நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் ரூ. 75 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

34. ஆசிரியர் பணித் தெரிவிற்கு விண்ணப்பிக்கும் பணிநாடுநர்கள் பயன் பெறும் வகையில், தகவல் மையங்கள் (KIOSK) ரூ. 10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

35. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்லும் போது அரசு அருங்காட்சியகங்களைப் பார்வையிட பெரிதும் ஊக்குவிக்கப்படுவார்கள்.

36. ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் நடத்தப்படும் கணினி வழி தேர்வுகளை வலுப்படுத்திட IIT, MIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x