Last Updated : 12 Mar, 2020 08:35 PM

 

Published : 12 Mar 2020 08:35 PM
Last Updated : 12 Mar 2020 08:35 PM

சாலையில் கிடந்த ரூ.80 ஆயிரம் பணம்: போலீஸில் ஒப்படைத்த மதுரை வழக்கறிஞர்- குவியும் பாராட்டு

மதுரை அண்ணாநகர் பகுதியில் சாலையில் கிடந்த ரூ.80,000 பணத்தை போலீஸில் ஒப்படைத்த வழக்கறிஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துக்குமார். இவர், நேற்று காந்தி மியூசியம் ரோட்டில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தோல் பை ஒன்று நடுரோட்டில் கிடந்தது. அந்தப் பையைக் கைப்பற்றி அவர் ஆய்வு செய்தார்.

அதில் வங்கி காசோலைகள், ரசீதுகள் மற்றும் ரொக்கப் பணம் இருப்பது தெரிந்தது. பக்கத்திலுள்ள கடைக்காரர்களிடம் இது பற்றி விசாரித்தபோதும், அது யாருடையது என்பது தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து, அவர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் அந்த பணப் பையை ஒப்படைத்தார். அந்தப் பையில் ரூ.80,000 ரொக்கப்பணம் இருந்தது.

பணத்தை தவறவிட்ட நபர் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். பணத்தை ஒப்படைத்த வழக்கறிஞர் முத்துகுமாரின் நேர்மையை போலீஸார் பாராட்டினர்.

இவர் ஏற்கெனவே, மதுரை அண்ணாநகர் 80 அடி ரோட்டில் அம்பிகா தியேட்டர் அருகில் கிடந்த செல்போன் ஒன்றை எடுத்து, அண்ணாநகர் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x