

நாமக்கல் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மேஸ்திரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாமக்கல் அடுத்த புதன்சந்தை ஜீவாநகரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி கந்தசாமி(45). இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மனைவி, மகள் ஆகிய இருவரும் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வந்த கந்தசாமி நேற்று இரவு வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் இவர் மீது பெட்ரோல் ஊற்றியுள்ளனர்.
கந்தசாமி சுதாரித்து கொண்டு எழுவதற்க்குள் தீயை பற்ற வைத்து விட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
உடல் முழுவதும் தீ பரவியதால் அலறல் சத்தத்துடன் கந்தசாமி தெருவில் ஓடியுள்ளார். இவரது கூச்சலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் கந்தசாமியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கந்தசாமி பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த கந்தசாமி மீது யார் தீ வைத்திருப்பார்கள், என்ன காரணமாக இருக்கும் என சேந்தமங்கலம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.