Published : 11 Mar 2020 01:33 PM
Last Updated : 11 Mar 2020 01:33 PM

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை: சட்டப்பேரவை வாயிலில் தரையில் அமர்ந்து தமிமுன் அன்சாரி தர்ணா

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் சிஏஏ, தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) ஆகிய சட்டங்கள் குறித்து சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. சிஏஏ, என்பிஆருக்கு எதிராகப் பல மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றினாலும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கைக்கு அசைந்து கொடுக்கவில்லை.

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் தீர்மானம் கொண்டுவர கோரிக்கை வைத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இம்முறையும் மானியக் கோரிக்கை மீதான் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து, விவாதம் நடத்தக் கோரியும் அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் என்பிஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்து அது ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு செய்தது. மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளிநடப்பு செய்தப்பின் சட்டப்பேரவைக்கு வெளியே கையில் கோரிக்கை பதாகை ஏந்தி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரை எழுந்து செல்லும்படி காவலர்கள் கோரினர். ஆனால், அதை அவர் ஏற்க மறுத்தார். சிறிது நேரம் கழித்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணியும் அவருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததை அடுத்து அவர்கள் கிளம்பிச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x