Published : 11 Mar 2020 09:18 AM
Last Updated : 11 Mar 2020 09:18 AM

தமிழகத்தில் என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தல்

தேசிய மக்கள் பதிவேடு (என்பிஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்ஆர்சி) எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், நெல்லை மனோன்மணீயம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம். படம்: பு.க.பிரவீன்

சென்னை

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை நிறுத்தி வைக்கவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடத்தப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் உள்ளிட்ட கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்குஎதிராக போராடும் மக்களின் சார்பாக அரிபரந்தாமன் உள்ளிட்டோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆர்) 13 மாநிலங்கள் நிராகரித்துள்ளன. அதுபோல தமிழ்நாட்டிலும் நிராகரிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறோம். இதன்படி, "தமிழக மக்களிடையே எழுந்துள்ள அச்ச நிலையைக் கருத்தில் கொண்டு, குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடிமக்கள் (குடியுரிமை பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) விதிகள் 2003-ன் கீழ் மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் தொடர்ந்து வரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான (என்ஆர்சி) கணக்கெடுப்பு நிறுத்திவைக்கப்படுகிறது. மக்கள் தொகைகணக்கெடுப்புச் சட்டம் 1948-ன் கீழ் கணக்கெடுப்பு மட்டும் ஏப்ரல் 1, 2020 முதல் நடத்தப்படும்" என்றுதமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவிபேசும்போது, “அசாமில் தடுப்பு முகாமில் உள்ள 12 லட்சம்இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கூறும்போது, “என்பிஆர் படிவத்தை யாரும் பூர்த்தி செய்யக் கூடாது என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அத்துடன் அமைதியான முறையில் வலுவான போராட்டம் நடத்துவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x