தூத்துக்குடியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பொதுக்கூட்டத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

தூத்துக்குடியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பொதுக்கூட்டத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
Updated on
1 min read

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பொதுக்கூட்டம் நடத்த, தூத்துக்குடி குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பல்சமய பேரியக்கத்துக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரம் நகரில் மார்ச் 13-ல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிதர் பிஸ்மி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பல்சமய பேரியக்கம்" என்ற அமைப்பை தூத்துக்குடியில் உருவாக்கியுள்ளோம்.

இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதில் இணைந்துள்ளன.

இந்த அமைப்புகள் சார்பில் தூத்துக்குடியில் சிதம்பர நகர் விவிடி சிக்னல் அருகே பொதுக்கூட்டம் நடைபெற அனுமதி கேட்டிருந்தோம்.
ஆனால் அதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதி மறுத்துவிட்டார்.

எனவே எங்களுக்கு அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மார்ச் 13-ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் 750 பேர் பங்கேற்கலாம். சட்டத்திற்கு உட்பட்டே பேச வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. ஒலி அளவு அனுமதிக்கப்பட்ட அளவிலேயே இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து போராட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in