

கோவையில் தகுதியில்லாத பலருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் 2,500 நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள், 2,300 ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர்.
சமீபத்தில் மாநகராட்சி சார்பில் 549 நிரந்தர துப்புரவுப் பணியாளர்களைத் தேர்வு செய்ய நேர்காணல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 340 பேருக்கு சமீபத்தில் பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் தகுதியில்லாத பலருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் கடந்த இரு தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 10) மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் ஏராமானோர் பணியைப் புறக்கணித்து மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் வழங்கப்பட்ட பணி ஆணையை ரத்து செய்து, அனுபவம் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், உக்கடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.