

மகப்பேறு மருத்துவர் இல்லாமல், செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது குறித்து, பொது சுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்பு துறையின் இயக்குனர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பூந்தமல்லியை அடுத்து குமணஞ்சாவடி கண்டோன்மென்ட் பகுதியில் வசிப்பவர் தமீம் அன்சாரி. இவரது மனைவி நஸ்ரின். நிறைமாத கர்ப்பிணியான நஸ்ரினுக்கு கடந்த 2-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் பூந்தமல்லி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
மகப்பேறு மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார். இதனால் குழந்தை பிறக்கும் போதே இறந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் நஸ்ரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். குழந்தை இறந்து பிறந்ததற்கு மகப்பேறு மருத்துவர் இல்லாததும், செவிலியர் பிரசவம் பார்த்ததும் ஒரு காரணம் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக செய்திதாளில் வந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்பு துறை இயக்குனர் மற்றும் திருவள்ளுர் சுகாதார துறையின் இணை இயக்குனர் ஆகியோர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்