

கோவிட் 19 குறித்து தவறான,அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புவோர் மீதும், போலிமருத்துவ அறிவியல் கருத்துக்களை பரப்புவோர் மீதும் மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜிஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:
* நாட்டின் பல்வேறு பகுதிகளி்லும்,உலகின் பல நாடுகளிலும் கோவிட் -19 பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் -19 ஐ தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. மக்கள் நெருக்கமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என சர்வதேச பொது சுகாதாரத்துறை நிபுணர்களும், உலக நல நிறுவன நிபுணர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.
இதை கவனத்தில் கொண்டு, நாடு முழுவதும் பொதுமக்களை, பெரும் எண்ணிக்கையில், அச்ச உணர்வுடன் ஒன்று திரண்டு போராட வைத்துள்ள, குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
கோவிட் -19 தடுப்பைவிட, பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் பிரச்சினை, அவசரமான அதிமுக்கியப் பிரச்சினையல்ல. நமது மக்களின் உடல் நலனையும், உயிரையும்,பொருளாதாரத்தையும் காப்பதுதான் மிக முக்கிய தலையாயப் பிரச்சினை.
கோவிட் -19 தடுப்பிற்கு, நாட்டில் அமைதியான சூழலையும்,பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் அனைத்து பகுதி மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும். அனைத்து குடிமக்களையும் கோவிட் -19 தடுப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அந்தப் பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு உள்ளது.
* இந்தியாவில் இதுவரை 34 பேர் கொவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் 19-ஐ தடுக்க தீவிர நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
* கோவிட் 19 யை உருவாக்கும் சார்ஸ் கரோனா வைரஸ் -2 வின் ,மரபியல் மற்றும் தொற்றும் தன்மைகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள், கோவிட் -19-ன் தீவிரத் தன்மையை அதிகரித்துள்ளன. இத்தகைய மாற்றங்களை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு கோவிட் 19 தடுப்பு மற்றும் சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
* மருத்துவ சிகிச்சை வழங்கும் குழுவினருக்கு ,பாதுகாப்பு முக கவசங்கள்,உடைகள் முதலியவை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் மருத்துவமனைகள்,மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு கவசங்கள் குறைந்த விலையில் அரசே வழங்க வேண்டும். அவற்றை அரசே விற்பனை மையங்களை தொடங்கி வழங்க வேண்டும்.விற்பனை செய்யப்படும் இடங்களை அறிவிக்க வேண்டும்.
* கை சுத்தப்படுத்தப் பயன்படும் நுண்ணுயுரி கொல்லி மருத்துவ திரவங்கள்,மருந்துகள், கையுறைகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றின் தட்டுப்பாடு,பதுக்கல், விலையேற்றம் உள்ளிட்டவற்றை போக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். பதுக்கல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கோவிட் 19 குறித்து தவறான,அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புவோர் மீதும், போலிமருத்துவ அறிவியல் கருத்துக்களை பரப்புவோர் மீதும் மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளில், அறிவியல் ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் செயல்பட வேண்டும். மூடநம்பிக்கைகள், தவறான கருத்துக்கள்,போலி மருத்துவ அறிவியல் கருத்துக்களை புறந்தள்ள வேண்டும்.
* நடப்பு கல்வியாண்டிற்கான அகில இந்தியத் தொகுப்பு,முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளது. இளநிலை முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில், அகில இந்தியத் தொகுப்பில் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை.எனவே, இவ்வாண்டு மாணவர் சேர்க்கையிலேயே அந்த இன ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.
* அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்ட 50 விழுக்காடு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை மீண்டும் வழங்கிட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.