

கரோனா குறித்த செல்போன் காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தியை அந்தந்த மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என, ராமதாஸ், கனிமொழி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. அதன்படி, ஒருவரை செல்போன் மூலம் தொடர்புகொள்ளும்போது, ரிங்டோன் வடிவில் கரோனா குறித்த விழிப்புணர்வு செய்தி கூறப்படுகிறது. இது ஆங்கிலத்தில் உள்ளது.
இதனால், இந்த விழிப்புணர்வு செய்தியை மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மார்ச் 9) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்போன் காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
அதேபோன்று, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்போன் காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி வரவேற்கத்தக்கது. அதேசமயத்தில், விழிப்புணர்வு செய்தியை அந்தந்த மாநில மொழிகளில் வழங்குவது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்" என பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், மத்திய சுகாதாரத் துறையின் ட்விட்டர் பக்கத்தை கனிமொழி 'டேக்' செய்துள்ளார்.