

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை மாசுபடுவதைத் தடுக்க புதிய குளியலறை, சலவைக் கூடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதற்காக, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான முருகன் கோயில் உள்ளது. இங்குள்ள சரவணப் பொய்கையில் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தினமும் துணி துவைப்பது குளிப்பது போன்றவற்றினால் பெருமளவில் மாசடைந்து துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி சார்பில் புதிய சலவைக் கூடம் , குளியலறை அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது.
இதற்கான பூமி பூஜை சரவணப் பொய்கை முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் இன்று நடைபெற்றது.
இதில், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர். மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், திருப்பரங்குன்றம் கோயில் இணை ஆணையர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், மாணிக்கம் தாகூர் எம் பி . கூறும்போது, "திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை பல வருடங்களாக மாசடைந்துள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய சலவைக் கூடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுச் செயல்படுத்தவுள்ளது. இதற்காக 44 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.