

திமுகவின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான க.அன்பழகன் மறைவையடுத்து கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? பொருளாளர் யார்? என்ற ஆவல் தொண்டர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மற்ற அரசியல் கட்சிகளும் கூட இதை உற்றுநோக்கி வருகின்றன.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள திமுக அரசியல் வல்லுநரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளைப் பெற்றுவருகிறது. பிரஷாந்த் கிஷோரின் வழிகாட்டுதலின்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வாகை சூட தென் மாவட்டங்களில் கட்சியின் பிடியை வலுப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் உறுதியுடன் இருக்கிறாராம்.
இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சிக்குள் போட்டாபோட்டியே நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
பொதுச் செயலாளர் போட்டியில் துரைமுருகன், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐ.பெரியசாமி தற்போது துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். ஆனால், துரைமுருகன் கட்சியில் சீனியர் என்பதால் அவருக்கே பொதுச் செயலாளர் பதவி என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது.
அதேவேளையில் இன்னொரு தரப்பில், மு.க.அழகிரிக்கு நிகராக தென் மாவட்டங்களில் வாய்ஸ் கொண்டவர் ஐ.பெரியசாமியே, அதனால் அவருக்குத்தான் துணைப் பொதுச்செயலாளர் பதவி என்று சலசலக்கப்படுகிறது.
இப்போதைக்கு, துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி, ஐ.பெரியசாமிக்கு பொருளாளர் பதவி என்றே மேலிடம் தீர்மானித்திருப்பதாக அறிவாலய வட்டாரம் கூறுகின்றது.
1977-ம் ஆண்டு திமுக பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் கட்சியில் இருந்து வெளியேறினார். அப்போது, கருணாநிதி தனது சகா க.அன்பழகனை பொதுச் செயலாளராக ஆக்கினார். அன்று தொடங்கி மார்ச் 6 வரை அன்பழகன் பொதுச் செயலாளராக இருந்துவந்தார். தற்போது, அவரின் மறைவை அடுத்து ஸ்டாலின் தன் கூடவே வழிகாட்டியாக இருக்கும் துரைமுருகனை பொதுச் செயலாளர் ஆக்குவாரா? இல்லை தெற்கே தன் பார்வையைத் திருப்பி ஐ.பெரியசாமியை பொதுச் செயலாளர் ஆக்குவாரா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் களத்தில் இல்லாமல் இல்லை.