Published : 09 Mar 2020 08:46 AM
Last Updated : 09 Mar 2020 08:46 AM

திமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வாக அதிக வாய்ப்பு: செப்டம்பரில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

திமுக பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமான தால், அந்த பொறுப்புக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1949-ம் ஆண்டு செப்டம்பரில் திமுகவை அண்ணா தொடங்கினார். அவர் அக்கட்சியின் முதல் பொதுச் செயலாளர் ஆனார். அவரைத் தொடர்ந்துநெடுஞ்செழியன் பொதுச் செயலாளரானார். பின்னர், திமுகவில் தலைவர் பதவிக்கும், பொதுச் செயலாளர் பதவிக்கும் சமமான அதிகாரம் இருக்கும் வகையில் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 1977-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய நெடுஞ்செழியன் அதிமுகவில் இணைந்தார்.

1977-ம் ஆண்டு திமுக பொதுச் செயலாளராக க.அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றுமுதல் 43 ஆண்டுகள் பொதுச்செயலாளராக அவர் செயல்பட்டார். இ்வ்வளவு ஆண்டுகள் பொதுச் செயலாளராக இருந்தபெருமை அவருக்கு மட்டுமே உள்ளது. அன்பழகன் மறைவையடுத்து பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர்களிடம் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. வரும் செப்டம்பரில்திமுக கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. வழக்கமாக கட்சித் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் ஆகியோர் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பொதுச் செயலாளர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது செயல்பட முடியாத நிலையில் இருந்தாலோ, அவரது பணியை கட்சித் தலைவரே கவனிப்பார் என்று திமுக சட்டவிதிகளில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அடுத்த பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அப்பதவியை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினே கவனிப்பார்.

திமுக பொருளாளராகவும், சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத்தலைவராகவும் உள்ள துரைமுருகன், கட்சியின் பொதுச் செயலாளராக அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எம்எல்ஏக்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி ஆகியோரும் இப்பதவிக்கு போட்டி போடுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x