

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ரஜினிகாந்த் கூறுவதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர் குப்புராம் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:
குடியுரிமை சட்டம் தற்போது 5-வது முறையாக திருத்தப்பட்டிருக்கிறது. இச் சட்டத்தால் இந்தியாவிலுள்ள யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. இதையே தமிழக முதல்வரும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இச் சட்டம் குறித்து சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். சில அமைப்புகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தவும், மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவும் இச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடத்துகின்றன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதனால் அரசியல் லாபம் அடையப் பார்க்கின்றன.
எங்கள் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ரஜினிகாந்த் கூறும் கருத்துகளால் பாஜகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை முடிவு செய்யும்.
பாஜகவில் எவ்வித கோஷ்டி பூசலும் இல்லை. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாநில தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
கட்சியின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் மகாராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.