சர்வதேச மகளிர் தினம்: உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி திருகை சுற்றி அசத்திய கோவில்பட்டி பெண்கள்

சர்வதேச மகளிர் தினம்: உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி திருகை சுற்றி அசத்திய கோவில்பட்டி பெண்கள்

Published on

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கோவில்பட்டி அருகே குலசேகரபுரத்தில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி பெண்கள் பயறு வகைகளை திருகையில் உடைத்து அசத்தினர்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குலசேகரபுரம் ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.

இதில் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பராம்பரிய முறைப்படி உரலில் கம்பு தானியத்தை இட்டு உலக்கையால் குத்தி, அதனை முறத்தால் தூசி புடைத்தனர்.

பின்பு திருகையில் பாசி, உளுந்து போன்ற பயறு தானியங்களை போட்டு இரண்டாக உடைத்து முறத்தில் தூசி புடைத்தனர்.

விழாவுக்கு ரோட்டரி மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ் தலைமை வகித்தார். குலசேகரபுரம் ஊராட்சி தலைவர் முரளிதரன், சமூக ஆர்வலர் பாலமுருகன், ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு தலைவர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மாணிக்கவாசகம் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

விழாவில், ரோட்டரி சங்க செயலாளர் முத்துமுருகன், நிர்வாகிகள் சீனிவாசன், பாபு மற்றும் குலசேகரபுரம் ஊராட்சி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in