Published : 07 Mar 2020 05:17 PM
Last Updated : 07 Mar 2020 05:17 PM

பெரியார் குறித்து பேச்சு: ரஜினி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யக் கோரும் மனு மீது மார்ச் 9-ம் தேதி தீர்ப்பு

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மார்ச் 9-ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு சர்ச்சையானது. இரண்டு பேரால் சோ வளர்ந்தார் என்று கூறிய ரஜினி அதற்கான காரணத்தைக் கூறினார். 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் ரஜினி தெரிவித்திருந்தார்.

அதை துக்ளக்கில் எழுதியபோது புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. கூடுதல் விலைக்கு மக்கள் வாங்கினார்கள் என்று ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டத் தலைவர் உமாபதி புகார் அளித்தார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உமாபதி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “ துக்ளக் இதழில் ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாகக் கொண்டு சென்றது தொடர்பாக எந்தப் புகைப்பட ஆதாரமும் இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் குறித்து தன்னுடைய அரசியல் லாபத்திற்காக ரஜினிகாந்த் பேசி வன்முறையைத் தூண்டிவிடுகிறார்.

வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மத உணர்வுகளைத் தூண்டி பெரியாரின் பெயருக்குக் களங்கம் விளைவித்து வன்முறையைத் தூண்டிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது .

மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x