க.அன்பழகன் மறைவு: திமுகவுக்குப் பேரிழப்பு; விஜயகாந்த் புகழாஞ்சலி

க.அன்பழகன் - விஜயகாந்த்: கோப்புப்படம்
க.அன்பழகன் - விஜயகாந்த்: கோப்புப்படம்
Updated on
1 min read

க.அன்பழகனின் மறைவு திமுகவுக்குப் பேரிழப்பு என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக உடல் நலிவுற்று தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்தார். கடந்த சில மாதங்களாக அவரது உடல்நிலை மோசமான நிலையை அடைந்தது.

இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 24-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமான நிலையை அடைந்தது.

இந்நிலையில் நேற்றிரவு அவரை திமுக தலைவர் ஸ்டாலின், கடைசியாகப் பார்த்துவிட்டுச் சென்றார். அப்போது அவர், அன்பழகனின் உடல்நிலை மருத்துவ சிகிச்சையை ஏற்கும் நிலையில் இல்லை என்று கவலையுடன் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர், திமுக பொதுச்செயலாளர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவரும், பன்முகத் திறமை கொண்டவருமான க.அன்பழகன் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இவரின் இழப்பு திமுகவுக்குப் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக கட்சியினருக்கும் தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in