Published : 07 Mar 2020 11:57 AM
Last Updated : 07 Mar 2020 11:57 AM

க.அன்பழகன் மறைவு: எந்தவிதமான விமர்சனங்களுக்கும் உள்ளாகாமல் தூய வாழ்க்கை வாழ்ந்தவர்; ராமதாஸ் புகழாஞ்சலி

க.அன்பழகன் ஓர் அப்பழுக்கற்ற, அழுக்காறாமையற்ற, அவாவற்ற தலைவர் என, பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 7) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திமுக பொதுச்செயலாளரும், திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான க.அன்பழகன் சென்னையில் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக, கற்றவர்களையும், கல்வியாளர்களையும் கொண்டிருந்தது. அவர்களில் அண்ணாவுக்கு மிகவும் நெருங்கியவராகத் திகழ்ந்தவர் க.அன்பழகன். சிறந்த அரசியல் தலைவராகவும், போற்றத்தக்க பேராசிரியராகவும் விளங்கிய அவர், அரசியலில் அவரது சம காலத்தவரைப் போன்று எந்தவிதமான சமரசங்களையும் செய்துகொள்ளாமல் பயணித்தவர். அதுதான் அவருக்குத் தனித்துவத்தையும், மரியாதையையும் சேர்த்தது.

அண்ணாவுக்கு எந்த அளவுக்கு நெருக்கமானவராக இருந்தாரோ, அதே அளவுக்கு கருணாநிதியிடமும் நெருக்கமாக இருந்தார். தம்மை விட அனுபவத்திலும், வயதிலும் குறைந்தவர் என்றாலும், அண்ணாவிடம் தம்மால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் என்றாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கருணாநிதியின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர். திறமையானவரின் தலைமையை ஏற்பதில் தயக்கமில்லை என்று கூறியவர். சுமார் 80 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான க.அன்பழகன் தமது வாழ்வில் கடைசி நிமிடம் வரை எந்தவிதமான விமர்சனங்களுக்கும் உள்ளாகாமல் தூய வாழ்க்கை வாழ்ந்தவர்.

அரசியலைக் கடந்து அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களைப் பெற்றிருந்தார். பிற கட்சியினர் ஆனாலும் அவர்களின் சிறப்புகளையும், திறமைகளையும் தயக்கமில்லாமல் பாராட்டியவர். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் 'தமிழ் ஓசை' நாளிதழைத் தொடங்கியபோது, அதன் தொடக்க விழாவிலும், இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவிலும் கலந்துகொண்டவர். தனித்தமிழ் சொற்களுடன் 'தமிழ் ஓசை' நாளிதழை நடத்தி வருவதற்காக என்னைப் பாராட்டியவர். திராவிட இயக்கங்கள் செய்ய வேண்டிய, ஆனால், செய்யத் தவறிய பணிகளை நான் செய்து வருவதாக வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார்.

க.அன்பழகன் ஓர் அப்பழுக்கற்ற, அழுக்காறாமையற்ற, அவாவற்ற தலைவர் அவர். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை சில நாட்களுக்கு முன் சந்தித்து நலம் விசாரித்தேன். உடல் நலம் தேறி மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.

அவரது மறைவு அரசியலுக்குப் பேரிழப்பு என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x