Published : 07 Mar 2020 07:23 AM
Last Updated : 07 Mar 2020 07:23 AM
ரசாயனம் கலந்த மீன்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை கரிமேடு மீன் சந்தையில் பார்மலின் ரசாயன மருந்து கலந்து விற்பனை செய்யப்பட்ட மீன்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சில தினங்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மீன் சந்தைகளில் ஆய்வு நடத்தி, ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்யும்படி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, மீன்வளத் துறை அதிகாரிகளுடன் இணைந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
இந்நிலையில், ரசாயனம் கலந்த மீனை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மீன் சந்தைகளில் ரசாயனம்கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரசாயனம் கலந்த மீன்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறுவிற்பனை செய்வது முதன்முறையாக கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படும்.
மீண்டும் அவ்வாறு விற்பனை செய்தால், அவர்களின் உரிமத்தை ரத்து செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கையை உணவு பாதுகாப்புத் துறை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT