Published : 06 Mar 2020 10:24 PM
Last Updated : 06 Mar 2020 10:24 PM

திருவள்ளூரில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபத்து

திருவள்ளூரில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் கழிவுநீர் விஷவாயு தாக்கி தொட்டிக்குள்ளேயே மயங்கிவிழுந்து உயிரிழந்தனர்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் இரும்பு துருப்பிடிக்காமல் இருப்பதற்கான ரசாயனம் தயாரிkகப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆலை நிர்வாகத்தினர் முடிவு செய்து அதை சுத்தம் செய்ய புட்லூர் பகுதியை சேர்ந்த வேலவன்(40), சந்துரு (35) என்பவர்கள் உடபட 3 தொழிலாளர்களை கூலி பேசி பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

கழிவு நீர் தொட்டியை திறந்து அதன் உள்ளே வேலவனும், சந்துருவும் இறங்கியுள்ளனர். அப்போது அவர்களை திடீரென விஷவாயு தாக்க இருவரும் உள்ளேயே மயங்கி விழுந்துள்ளனர். இதனால் பயந்துபோன மற்றவர்கள், ஆலை நிர்வாகத்தினர் வேறு யாரையும் உள்ளே இறங்கவிடாமல் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர், கழிவு நீர் தொட்டியில் இறங்கி உள்ளே விழுந்துக்கிடந்த இருவரையும் மேலே தூக்கி வந்தனர். பின்னர் அவர்களை பரிசோதித்தபோது இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. விஷவாயு தாக்கியதில் அவர்கள் இருவரும் தொட்டிக்குள்ளேயே உயிரிழந்துவிட்டனர்.

இதையடுத்து, அவர்கள் இருவர் உடலையும் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். துப்புரவுப்பணியில் இறந்ததால் தேசிய துப்புரவாளர் ஆணைய கவனத்துக்கு செல்லும் என்பதால் வருவாய் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் விசாரணையில் ஈடுபட்டனர்.

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொட்டிக்குள் இறங்கியதே உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி சம்பந்தப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் அப்பகுதியில் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர். போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x