Published : 06 Mar 2020 03:10 PM
Last Updated : 06 Mar 2020 03:10 PM

கர்நாடக விபத்து: உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

கர்நாடக விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (மார்ச் 6) வெளியிட்ட அறிக்கையில், ''கர்நாடக மாநிலத்திலுள்ள, தர்மஸ்தலாவுக்குப் புனிதப் பயணம் சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டம், குனிக்கல் என்ற இடத்தில் பக்தர்கள் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சிக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரராஜ், திருசன்னியா, மஞ்சுநாத், தனுஜா, ரத்தினம்மா, சிறுமி மாலாஸ்ரீ, குழந்தை சேத்தன், சரளா, ராஜேந்திரா மற்றும் கவுரம்மா ஆகிய 10 நபர்கள் உயிரிழந்தனர். இச்செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தத் துயரச் செய்தி கிடைக்கப்பெற்றவுடன், வாகனத்தில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து முழுத் தகவல் பெறுமாறும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு நான் உத்தரவிட்டேன். எனது உத்தரவின் பேரில், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கர்நாடக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசினர்.

வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் அடங்கிய ஒரு குழு, கர்நாடக மாநிலத்திற்குச் சென்று இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும், போர்க்கால அடிப்படையில் இந்த ஏற்பாடுகளைச் செய்யவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்தத் துயரச் சம்பவத்தின் தன்மையையும், உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையையும் கருத்தில் கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் சிறப்பினமாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x