சிங்காரா வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

சிங்காரா வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு
Updated on
1 min read

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா சரகத்தில் ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.

இந்தச் சரகத்துக்கு உட்பட்ட நார்தன்ஹே வேட்டை தடுப்பு முகம் அருகில் நேற்று மாலை சுமார் 30 வயதுடைய ஆண் யானை ஒன்று மாயார் ஆற்றோரத்தில் உடல் நிலை சரியில்லாமல் படுத்திருந்ததை வன ஊழியர்கள் கண்டனர்.

இதுகுறித்து வன ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சரகர் காந்தன் மற்றும் மசினகுடி உதவி கால்நடை மருத்துவர் கோசலன் யானையை ஆய்வு செய்தனர். மருத்துவரின் ஆலோசனைப் படி மூன்று கும்கி யானைகளின் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கள இயக்குனர் கே.கே.கவுசல் தணிக்கைக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் யானைக்கு நிறைய உள் காயங்கள் இருந்தது தெரியவந்தது. வேறு யானையுடன் சண்டையிட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டு யானை இறந்திருக்கலாம் என மருத்துவர் தெரிவித்தார்.

தந்தங்கள் அகற்றப்பட்டு, அப்பகுதியிலேயே யானை புதைக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in