ஈரோட்டில் ஆபாசப்படங்களைப் பகிர்ந்த இளைஞரை காட்டி கொடுத்த முகநூல் நிறுவனம்- போலீஸார் தகவல்

ஈரோட்டில் ஆபாசப்படங்களைப் பகிர்ந்த இளைஞரை காட்டி கொடுத்த முகநூல் நிறுவனம்- போலீஸார் தகவல்
Updated on
1 min read

சமுக வலைத்தளங்களில் சிறுமியரின் ஆபாசப் படங்களை பகிர்ந்த ஈரோடு இளைஞர் குறித்து, முகநூல் நிறுவனமே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. சமூக வலைத் தளங்களில் சிறுவர், சிறுமியர்களின் ஆபாசப் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்கள், அதனை பதிவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு பகிர்பவர்கள் போலீஸாரால் கண் காணிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் முகநூல் மூலம் சிறுமியரின் ஆபாச படத்தை பகிர்ந்த யோகேஸ்வரன் (35), கடந்த இரு நாட்களுக்கு முன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவரது கைது நடவடிக்கைக்கு முகநூல் நிறுவனமே உதவியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

ஈரோடு பாப்பாத்தி காட்டைச் சேர்ந்த யோகேஸ் வரன், அப்பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். திருமணமாகாத இவர், கடந்த சில ஆண்டுகளாக முகநூலில் இயங்கி வருகிறார். இவரது முகநூல் கணக்கு மூலம் சிறுமியரின் ஆபாச படங்கள் பகிரப்படுவதைக் கண்டறிந்த முகநூல் நிறுவனம், இதுகுறித்து டெல்லியில் உள்ள தகவல் தொழில்நுட்ப குற்றத் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அங்கிருந்து சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு தகவல் சென்ற நிலையில், சென்னை போலீஸார் கோவை டிஐஜிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் வீரப்பன் சத்திரம் போலீஸார் யோகேஸ் வரனின் முகநூல் பக்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் அவரைக் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களான முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை முழுமையாகக் கண்காணிக்கப்படுவதால், அதனை சட்டவிதி களுக்கு மாறாக பயன்படுத் தினால், உடனே கண்டறியப் படுவார்கள் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in