Published : 05 Mar 2020 10:08 AM
Last Updated : 05 Mar 2020 10:08 AM

மருத்துவக் கல்லூரியாக மாறும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை: நிறைவேறியது 50 ஆண்டு கனவு- முன்னாள் எம்.எல்.ஏ. சு.துரைசாமி நெகிழ்ச்சி

திருப்பூர்

திருப்பூர் அரசு தலைமை மருத்துவ மனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற உள்ள நிலையில், 50 ஆண்டு கனவு நிறைவேறியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார், திருப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. சு.துரைசாமி.

ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் திருப்பூர் சிற்றூ ராகவே இருந்தது. அதன்பின்னர் ஜவுளி, அரிசி ஆலை, நூற்பாலை, பின்னலாடை என தொழில் நகரமாக உருவெடுக்க, அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது. தாராபுரம் சாலையில் உள்ள தற்போதைய திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை, ஒரு காலத்தில் திருப்பூர் நகராட்சி குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வந்ததை, இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த இடத்தை நகராட்சியிடம் இருந்து வாங்கி, தொலைநோக்கு பார்வையோடு, மருத்துவமனை உருவாகக் காரணமாக இருந்தவர், அப்போதைய திருப்பூர் திமுக எம்.எல்.ஏ. சு.துரைசாமி. 1967-1976-ம் ஆண்டு வரை, தொடர்ச்சியாக இருமுறை எம்எல்.ஏ.வாகதேர்ந் தெடுக்கப்பட்டவர். இன்றைக்கு மதிமுகவின் மாநில அவைத்தலைவர்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை எப்படி உருவானது என்பது பற்றி, சு.துரைசாமி கூறிய தாவது:

அன்றைய பொது மருத்துவத்துறை இயக்குநர் மரைக்காயரை அழைத்து வந்து திருப்பூரில் மருத்துவமனை தொடங்கும் எண்ணத்தை சொன்னோம். திருப்பூரில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்தார். தாராபுரம் சாலையில், திருப்பூர் நகராட்சி குப்பை கொட்டிய இடம் தான், இன்றைய மருத்துவமனை அமைந்துள்ள இடம். இது நகரின் பிற்கால வளர்ச்சிக்கு பயன்படும் என, இந்த இடத்தை மரைக்காயர் தேர்வு செய்தார். அப்போதைய நகராட்சி ஆணையர் சீனிவாசனுக்கு, எம்.எல்.ஏ. என்ற முறையில் நான் கடிதம் கொடுத்தேன். அப்படித்தான் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு இடம் கிடைத்தது.

ஊரைத் தாண்டி மருத்துவமனை கட்டுவதாக, அப்போது அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இன்றைக்கு இந்த இடம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற உள்ளது.

கோவையில் கூட மருத்துவக் கல்லூரி ஒருபக்கமும், மருத்துவமனை மற்றொரு பக்கமும் இருக்கும். இதனால் மருத்துவம் பயில்வோர், நாள்தோறும் சிரமத்தை அனுபவித்துக் கொண்டி ருப்பார்கள்.

தற்போது தொடங்க உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவமனை வளாகத்தில் கட்ட உள்ள மருத்துவக் கல்லூரி திருப்பூர் மட்டுமே! வேறு எங்கும் இல்லாத இடவசதி, இங்கிருப் பதை பலரும் உணரத் தொடங்கி உள்ளனர்.

மறைக்கப்பட்ட பெயர்

சிக்கண்ணா செட்டியார் அறக்கட்டளை ரூ. 2லட்சம், அரிமா சங்கம் ரூ. 50000 மற்றும் பலர், நிலத்தை நகராட்சியிடம் வாங்க பணம் கொடுத்தனர். யார் மருத்துவமனை வரக் காரணமாக இருந்தார்கள், என்பதை விவரிக்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் பெயர் பலகை இருந்தது. அதனை தற்போது மறைத்துள்ளனர். பொதுமக்களுக்கு தெரிய வேண்டிய விஷயம் மறைக்கப் பட்டுள்ளது.இதனை அதிகாரிகளும், உயர் மருத்துவ அதிகாரிகளும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உருப்பெற காரணம்

5.7.1976-ம் ஆண்டு தமிழக ஆளுநராக இருந்த மோகன்லால் சுகாதியா, கோவை ஆட்சியர் நரசிம்மன் ஆகியோர் திருப்பூரில் அரசு மருத்துவமனையை தொடங்கி வைத்தனர். மருத்துவமனை கட்டிடக்குழுத் தலைவர் நரசிம்மன் ஐ.ஏ.எஸ், துணைத் தலைவர் கோட்டாட்சியர் அ.இளங்கோ வன், மாவட்ட மருத்துவ அலுவலர்எஸ்.அண்ணாமலை, என். குமாரசாமி முதலியார், சி. ராமசாமிசெட்டியார், எல்.ஜி.பாலகிருஷ் ணன், செயலாளர் சு.துரைசாமி, துணைச் செயலாளர்கள் ஜெத்து பாய் கோவிந்த்ஜி, ரத்தினசாமி கவுண்டர், எம்.கே.ராமநாதன், பொருளாளர் பழனிசாமி செட்டியார் ஆகியோரின் பெருமுயற்சியால் இந்த மருத்துவமனை அன்றைக்குஉருப்பெற்றது. நாங்கள் கண்டகனவு இன்றைக்கு நனவாகி விட்டது. 50 ஆண்டுகளுக்கு பிறகுமருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகமாறுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் கே.பழனிசாமி இன்னும் சில தினங்களில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை உருவாகக் காரணமாக இருந்தவர்கள் மற்றும் முயற்சி எடுத்தவர்களின் குடும்பத்தினரை, அடிக்கல் நாட்டு விழாவில் முறைப்படி கெளரவிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் உண்டுஎன்றார். இதனை அரசு கவனிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x