Published : 05 Mar 2020 07:48 AM
Last Updated : 05 Mar 2020 07:48 AM

கல்லூரி மாணவர்களின் விவரங்களை திருடி பெற்றோரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு- 4 பேர் கைது; 2 பேர் தலைமறைவு

சென்னை ராமாவரம் அடுத்த ராயலா நகர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் சிலர், இக்கல்லூரி மாணவர்களின் பெற்றோரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கல்லூரியில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர். கல்விக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது என்றும், அதை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும், தவறினால் மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில முடியாது எனவும் பெற்றோரிடம் பயமுறுத்தி உள்ளனர். இதை நம்பிய பெற்றோர் சிலர் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிலர், சம்பந்தப்பட்ட கல்லூரிக்குச் சென்று இதுகுறித்து விசாரித்தனர். ஆனால், கல்வி கட்டணம் உயர்த்தப்பட வில்லை, இதுதொடர்பாக யாரையும் நாங்கள் தொடர்பு கொள்ளவும் இல்லை என்று அவர்களிடம் நிர்வாக அலு வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து ராயலாநகர் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். வழக் குப் பதிவு செய்த போலீஸார், முதல்கட்டமாக தொலைபேசி எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீஸாரின் உதவி யுடன் விசாரணையைத் தொடங்கினர். இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த செந் தில்குமார்(42) என்பவர் சிக்கினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த நூதன மோச டிக்கு மூளையாகச் செயல் பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த ஷேக் அகமது(27), கேரளா வைச் சேர்ந்த சாதிக்(42), அப்துல் லத்தீப்(54) ஆகி யோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பயன் படுத்திய சிம்கார்டுகள், லேப் டாப், செல்போன்களும் பறி முதல் செய்யப்பட்டன. தலை மறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த மோசடி குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, ‘‘தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர் கள் மற்றும் பெற்றோர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை ஹேக்கர்களிடம் இருந்து இந்த மோசடிக் கும்பல் பெற்றுள்ளது. செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் மாட்டிக் கொள்வோம் என்று கருதி, சிம்கார்டைப் பயன் படுத்தி கணினி மூலம் பேசும் கருவியில் இருந்து பெற்றோ ரைத் தொடர்பு கொண்டு பணம் பறித்துள்ளனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x