Published : 04 Mar 2020 05:35 PM
Last Updated : 04 Mar 2020 05:35 PM

அவதூறு வழக்கு; திமுக கோரிக்கை நிராகரிப்பு: எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

திமுக தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகளின் விசாரணையை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி டெண்டர்கள் குறித்தும், மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலின்படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாகவும் தமிழக அரசை விமர்சித்து ஸ்டாலின் பேசியது தொடர்பான செய்திகள் முரசொலி நாளிதழில் வெளியானது.

ஸ்டாலின் பேச்சு தங்களையும், தமிழக அரசையும் அவதூறு செய்வதாகக் கூறி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தமிழக அரசின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாகப் பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்குகளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஸ்டாலினுக்கு அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் சம்மனை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பதால் இந்த வழக்கை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதாகவும், வரும் ஏப்ரல் 8-ம் தேதி வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x