Published : 04 Mar 2020 03:55 PM
Last Updated : 04 Mar 2020 03:55 PM

பள்ளி நேரத்திற்கு பேருந்தை இயக்கக் கோரி சாலை மறியல்

பண்ணாரி அருகே பள்ளி வேளையில் அரசுப் பேருந்தை இயக்கக் கோரி பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகேயுள்ள புதுபீர்கடவு மற்றும் பட்ரமங்கலம் பகுதிகளைச் சேர்ந்த 37 குழந்தைகள் தொட்டம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். காலை வேளையில் பள்ளி நேரத்திற்கு பேருந்து வராததால் இவர்கள் 3 கி.மீ. நடந்தே சென்று புதுபீர்கடவு பிரிவுக்குச் செல்ல வேண்டியுள்ளது. சில பெற்றோர் இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர். பல குழந்தைகள் நடந்தே செல்கின்றனர்.

இப்பகுதி வனத்தையொட்டி உள்ளதாலும் சிறுத்தைகள் நடமாட்டமிக்க பகுதியாகவும் உள்ளதால் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். பண்ணாரியிலிருந்து பவானிசாகர் செல்லும் அரசுப் பேருந்தை பீர்கடவு பிரிவிலிருந்து காலை வேளையில் பள்ளி நேரத்தில் ஊருக்குள் இயக்க வேண்டும் என வலியுறுத்தி நம்பியூர் கிளை மேலாளருக்கு பலமுறை விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.

நடவடிக்கை ஏதுமில்லாததால் சலிப்படைந்த பெற்றோர் பள்ளிக் குழந்தைகளுடன் இன்று (மார்ச் 4) காலை 8.30-க்கு புதுபீர்கடவு பிரிவில் இப்பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரமும் வந்தனர். இருதினங்களில் தீர்வு காண்பதாக டிஎஸ்பி அளித்த உறுதி மொழியையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x