

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராஜா கார்த்திகேயன் வாதிடுகையில், ”மாவட்ட பிரிப்புகள் நடைபெற்றுள்ளதால் புதிய 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முடிவடைய வேண்டியதுள்ளது. இதனால் பதில் மனு தாக்கல் செய்ய 5 வார கால அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்.
மனுதாரர் தரப்பில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க கால அவகாசம் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதையேற்க மறுத்த மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க 4 வார கால அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.