

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் சங்ககராபுரம் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் 5-வது வார்டு உறுப்பினர் பாண்டியராஜன் வெற்றி பெற்றார்.
மொத்தம் 15 வார்டுகளுக்கான தேர்தலில், பாண்டியராஜன் , விவேக் என இருவர் போட்டியிட்டனர். இவர்களில் பாண்டியராஜன் 11 வார்டுகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். மறைமுகத் தேர்தலை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் தேர்தலில், தேவி மாங்குடி, பிரியதர்ஷினி அய்யப்பன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், வெற்றிபெற்றதாக இருவருக்கும் தேர்தல் அதிகாரி சான்றிதழ் வழங்கினார். இதனிடையே யார் ஊராட்சித் தலைவர் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும் ஊராட்சித் தலைவருக்கு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை உள்ளது. இதைக் காரணம் காட்டி, ஜன.11, ஜன.30-ம் தேதிகளில் நடக்கவிருந்த ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்தார்.
இந்நிலையில் மார்ச் 4-ம் தேதி (இன்று) துணைத் தலைவர் தேர்தலை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதும் தேவி மாங்குடி, ஊராட்சி வார்டு உறுப்பினர் கணபதி ஆகியோர் ஊராட்சித் தலைவர் பதவியேற்கும் வரை துணைத் தலைவர் தேர்தலை நடத்த கூடாது என ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஆனால் ‘ஊராட்சித் தலைவர் பதவியேற்ற பிறகுதான் துணைத் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும்,’ என்ற விதிமுறை இல்லை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஏற்கெனவே இரு முறை துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைத்த நிலையில் சங்ககராபுரம் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் 5-வது வார்டு உறுப்பினர் பாண்டியராஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.