Last Updated : 31 Aug, 2015 02:56 PM

 

Published : 31 Aug 2015 02:56 PM
Last Updated : 31 Aug 2015 02:56 PM

ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு? - கோவை மாநகராட்சி மவுனம்: மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால், மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் பல நூறு ஏக்கர் பரப்பிலான இடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவற்றை அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். மாநகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்கள் குறித்த அனைத்து தகவல்களும், மண்டல, வார்டு வாரியாக கோவை மாநகராட்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் முழுமையான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

இணையதளத்தில் கிடைக்காத விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறலாம் என்றால், அதற்கும் பதில் அளிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மெளனம் காத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் கூறியதாவது: மாநகராட்சி இணையதளத்தில் ஆக்கிரமிப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் இல்லாததால், தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம், அந்த விவரங்களைக் கேட்டு நகரமைப்பு பிரிவு செயற்பொறியாளர் (திட்டம்) முகவரிக்கு விண்ணப்பித்தோம். ஆனால் 60 நாட்களுக்கும் மேலாகியும் அந்த மனுவுக்கு பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் மாநகராட்சி துணை ஆணையருக்கு மேல் முறையீடு செய்தோம்.

அதற்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. வழக்கமாக தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுவுக்கு 30 நாட்களில் பதில் தரவேண்டும். மேல்முறையீட்டில் 45 நாட்கள் ஆகும். ஆனால் பல மாதங்களாக அலைக்கழிக்கப்படுவதால், தற்போது மாநில தகவல் ஆணையத்தில் பிரிவு 19(3)ன் கீழ் இது குறித்து முறையீடு செய்துள்ளோம்.

குறிப்பிட்ட மண்டலத்தில், வார்டில், புல எண்ணில் உள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் மட்டும் இணையதளத்தில் கிடைக்கிறது. ஆனால் அதை ஆக்கிரமித்துள்ளவர்கள் யார்? எவ்வளவு காலமாக அந்த இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது? இதனால் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு? இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என பல கேள்விகள் எழுகின்றன. மாநகராட்சிக்கு வரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் இதைக் கேட்கும் உரிமை உண்டு. அரசு இடத்தை ஆக்கிரமித்து லாபமடைந்து வருபவர்களை இணையதளத்தில் வெளியிடுவதில் அதிகாரிகளுக்கு என்ன சிரமம் இருக்கிறது எனத் தெரியவில்லை.

மாநில தகவல் ஆணையத்திடமிருந்து முழுமையான தகவல் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x