லஞ்ச வழக்கில் கைதான துணை ஆட்சியர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு?- விரைவில் நடவடிக்கை என தகவல்

தினகரன்
தினகரன்
Updated on
1 min read

வேலூரில் விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான தனித்துணை ஆட்சியர் தினகரன் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு விரைவில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியராக பணியாற்றியவர் தினகரன் (47). இவர், விவசாய நிலத்துக்கான முத்திரை கட்டண புகார் தொடர்பாக ரஞ்சித்குமார் என்பவரிடம் இருந்துரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கடந்த சனிக்கிழமை கார் ஓட்டுநர் ரமேஷ்குமார் என்பவருடன் கைது செய்யப்பட்டார்.

மேலும், காட்பாடியில் உள்ள இவரது வாடகை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இரும்பு பெட்டியில் பதுக்கி வைத்திருந்த ரூ.76 லட்சத்து 64,600 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப்பணம் முழுவதும் லஞ்சமாக பெறப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், போளூரில் உள்ள தினகரனின் சொந்த வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு இடங்களில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தினகரன் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ளவங்கிக் கணக்குகள், லாக்கர்களை முடக்க அந்தந்த வங்கிக் கிளைகளுக்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே, வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்து ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் முழுமையான விசாரணை நடத்தவுள்ளனர். இதன் முடிவில், அரசு ஊழியராக இருந்து வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

அப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டால் தினகரன் மீதான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரின் வழக்கு எண்ணிக்கை மூன்றாக அதிகரிக்கும். ஏற்கெனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கேபிள் டிவியில் முறைகேடு வழக்கு, வேலூர் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்குடன் சொத்துக் குவிப்பு வழக்கும் சேரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in