போக்குவரத்து கழகத்தில் வேலை; மோசடி வழக்கு: செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் 

போக்குவரத்து கழகத்தில் வேலை; மோசடி வழக்கு: செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் 
Updated on
1 min read

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி உள்ளிட்ட நால்வர் மீதான குற்றச்சாட்டு பதிவு மார்ச் 23- ம் தேதி நடைபெறும் என சென்னை எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. 2015-ம் ஆண்டு அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து ரூ 90 லட்சத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ரூ. 2 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி மந்தைவெளி வீட்டுக்கு சீல் வைத்தனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை தரப்பில் நோட்டீஸ் கொடுத்த அன்றைய தினமே முன் ஜாமீன் வழங்கியது குறித்து விளக்கம் கேட்டு காவல்துறை சார்பில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 14-ம் தேதி பட்ஜெட் கூட்டத்துக்குப் போகும் முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் செந்தில் பாலாஜி ஆஜரானார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி ஆஜராகவிருந்த நிலையில் இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த பிப்.20-ம் தேதி அன்று காலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்பு திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு ஆகிய மூன்று பேரும் ஆஜராகினர்.

குற்றச்சாட்டு பதிவிற்காக வழக்கு 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 3-ம் தேதியன்று கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.

இன்று சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி, பிரபு, அன்னராஜ் ஆகியோர் மட்டும் ஆஜரானார்கள். விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சகாயராஜன் ஆஜராகாவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குற்றச்சாட்டு பதிவை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றையதினம் நால்வரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in