கோடநாடு கொலை, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: அடையாளம் காட்டினார் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர்

கோடநாடு கொலை, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: அடையாளம் காட்டினார் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர்
Updated on
1 min read

கோடநாடு கொலை மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் அடையாளம் காட்டினார்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், மற்ற 8 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சிகளிடம் விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி தொடங்கியது. 2-ம் சாட்சி பஞ்சம் விஸ்வகர்மா மற்றும் 3-ம் சாட்சி சுனில் தாபா ஆகியோர் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். முக்கிய சாட்சியான கிருஷ்ண தாபா கடந்த மாதம் 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மேலும், சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி, உதயன் ஆகிய 5 பேரை அவர் அடையாளம் காண்பித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேரும் ஆஜராயினர். இன்று 10-ம் சாட்சியான கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் நடராஜன் விசாரணைக்கு ஆஜராயினார். நடராஜனிடம் அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் விசாரணை நடத்தினர்.

கொலை மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. கொலை மற்றும் கொள்ளை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கொலை, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை நடராஜன் அடையாளம் காட்டினார்.

நடராஜனின் வாக்குமூலத்தை நீதிபதி பி.வடமலை பதிவு செய்துக்கொண்டார். மேலும், சாட்சிகள் யாசின், நவுஷாத் மற்றும் ஷாயின்ஷா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. காலை முதல் மாலை வரை நடந்த விசாரணைக்குப் பின்னர் வழக்கு விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு நீதிபதி வடமலை ஒத்தி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in