Published : 02 Mar 2020 03:04 PM
Last Updated : 02 Mar 2020 03:04 PM

சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரணாக செயல்படுவோம்: முதல்வர் பழனிசாமி உறுதி

'ஒரு மத நல்லிணக்க அரசாகவும், சிறுபான்மை மக்களுக்கு அரணாகவும் செயல்படுகிற நமது அரசு, இனியும் சிறுபான்மை மக்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் அரணாக இருக்கும்' என்று முதல்வர் பழனிசாமி உறுதி தெரிவித்தார்.

ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 நகரங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ராமநாதபுரத்தில் பட்டினம்காத் தான் அம்மா பூங்கா அருகே ரூ.345 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இதற் காக அங்கு 22.6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா அம்மா பூங்கா அருகே உள்ள திடலில் நேற்று காலை நடைபெற்றது.

விழாவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

முதல்வர் பழனிசாமி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அவசர மற்றும் உயர் மருத்துவ சிகிச்சைகளுக்காக, சுமார் 100 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் போதும், கோரிக்கை மனுக்கள் அளித்தபோதும், தனியே கடிதங்கள் வாயிலாகவும் கூறி வந்தேன்.

தனிப்பட்ட வெற்றி

நான் தொடர்ந்து வற்புறுத்தியதால் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை என் தனிப்பட்ட வெற்றியாகவும் நான் கருதுகிறேன்.

தமிழகத்தில் தற்போது 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் மூலம் 3,600-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர் இடங்கள் உள்ளன. 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் மூலம் 2021-22-ம் கல்வி ஆண்டு முதல் கூடுதலாக 1,650 மருத்துவப் பட்டப் படிப்பு இடங்களுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, கச்சத்தீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தினார். தமிழக அரசு இப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தும்.

இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு. மதச்சார்பின்மையை அடிப்படை நோக்கமாகக் கொண்டு நமது மாநிலம் செயல்படுகிறது. இங்கு வாழும் அனைத்து சமயத்தினரும் சகோதரர்களாகப் பழகி வருகிறார்கள்.

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில் தமிழக அரசு அனைத்து சமயத்தினரையும் பாதுகாக்கும். ஒரு மத நல்லிணக்க அரசாகவும், சிறுபான்மை மக்களுக்கு அரணாகவும் செயல்படுகிற நமது அரசு இனியும், சிறுபான்மை மக்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் அரணாக விளங்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் சமீப காலங்களில் இதைக் கண்டு பொறுக்காதவர்கள், அரசியல் உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பாகப் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுபான்மை மக்கள் சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. அதேபோல் மக்கள் இடையே பிளவு ஏற்படுத்த யார் முயன்றாலும் அது முறியடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகத்தில் சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் ரூ.380 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடை பெற்றது. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

அரசு மருத்துவக் கல்லூரிக்கு பூமி பூஜையைத் தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் அடுத்த ஆண்டு 150 மாணவர் சேர்க்கை தொடங்கும். இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குத் தரமான மருத்துவப் படிப்பு கிடைக்கும்.

தமிழகத்தில் மருத்துவத்துறை சிறந்து விளங்குகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பணி விரைவில் தொடங்கும். புற்று நோய் சிகிச்சைக்காக நாட்டிலேயே முதன் முறையாக தலா ரூ.20 கோடியில் 10 மருத்துவக் கருவிகள் 2 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 8 அரசு மருத் துவமனைகளில் அமைக்கப்பட உள்ளன.

சிறுபான்மை மக்களுக்குப் பாது காப்பு தரும் அரசு அதிமுக அரசு. மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது. இதில் பல்வேறு சந்தேகங் கள் சிறுபான்மை மக்களுக்கு உள்ளன. மொழி, தாய், தந்தை பிறந்த இடம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண் டும். இவற்றைத் தெரிந்தால் சொல் லலாம், இல்லாவிட்டால் சொல்லத் தேவையில்லை என மத்திய அரசு கூறிவிட்டது. எனவே சிறுபான்மை மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x