எந்த துறையில் முறைகேடு நடந்தாலும் தவறு செய்வோர் மீது நடவடிக்கை- முதல்வர் பழனிசாமி உறுதி

எந்த துறையில் முறைகேடு நடந்தாலும் தவறு செய்வோர் மீது நடவடிக்கை- முதல்வர் பழனிசாமி உறுதி
Updated on
1 min read

எந்தத் துறையில் முறைகேடு இருந்தாலும், அதுகுறித்து விசாரித்து தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

குடியுரிமைச் சட்டம் தொடர்பான போராட்டம் குறித்து சட்டப் பேரவையில் தெளிவாகக் கூறிவிட்டேன். இது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் தெளிவுபடுத்தி உள்ளார்.

கடந்த 2003-ல் பாஜக-திமுக கூட்டணி ஆட்சியின்போதே தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) திட்டம் கொண்டு வரப்பட்டது. 2010-ல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே இருந்த என்பிஆர் திட்டத்தில் தற்போது மொழி, தாய், தந்தை பிறப்பிடம், ஆதார், குடும்ப, வாக்காளர் அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை விரும்பினால் கொடுக்கலாம். கொடுக்காமலும் இருக்கலாம். இதுபற்றி மத்திய அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

எந்தத் துறையில் முறைகேடு இருந்தாலும், அதுகுறித்து விசாரித்து தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மாற்றுக் கருத்து கிடையாது.

கிராமங்களில் இணையதள வசதி வழங்கும் திட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான பிரச்சாரம் செய்கின்றனர். இத்திட்டத்தால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இணையதள வசதி பெற முடியும். அத்திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. திட்டம் வரும் முன்பே அதில் ஊழல் என எப்படி பேச முடியும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மக்கள் மனதில் அதிமுக நிலையாக நின்றுவிடும் என்ற அச்சத்தில் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு ஜப்பான் நிறுவனம் கடனுதவி செய்கிறது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in