Last Updated : 29 Feb, 2020 10:18 AM

 

Published : 29 Feb 2020 10:18 AM
Last Updated : 29 Feb 2020 10:18 AM

சரக்கு வேன் மீது கார் மோதி விபத்து: 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் சரக்கு வேன் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி தண்டியநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் இன்று (பிப்.29) காலையில் வயல் வேலைக்காக சரக்கு வேனில் தண்டியநேந்தல் கிராமத்திலிருந்து பந்தல்குடிக்கு சென்றுகொண்டிருந்தனர் அப்போது அருப்புக்கோட்டை புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அரசு தொழிற்பயிற்சி பள்ளி அருகே வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டி அதிவேகமாக வந்த 'ரெனால்ட் லாட்ஜி' கார் ஒன்று, இவர்கள் சென்றுகொண்டிருந்த வேனின் பின்புறம் பலமாக மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் சரக்கு வேன் மறுபக்க சாலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு தலைகீழாக கவிழ்ந்து, சரக்கு வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த விஜயலட்சுமி (30) மற்றும் பழனியம்மாள் (28) ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 17-க்கும் மேற்பட்டோரை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனத்தின் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். இதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாரி (50) என்பவர் உயிரிழந்தார்.

படுகாயமடைந்தவர்களுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 12 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். உயிரிழந்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x