Published : 29 Feb 2020 07:44 AM
Last Updated : 29 Feb 2020 07:44 AM

உளவுத்துறை தகவல் தெரிவித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்- காசிமேடு ரவுடி கொலையில் ஆணையர் உத்தரவு

காசிமேட்டில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உளவுத்துறை எச்சரித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதாக காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

காசிமேடு சிங்காரவேலன் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் திவாகரன்(28). இவர்மீது 3 கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் கடந்த 26-ம் தேதி இரவு காசிமேடு கடல் உணவு வியாபாரிகள் நலச்சங்கம் எதிரே நடந்து சென்று கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காசிமேடு போலீஸார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், திவாகரன் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டனி, லோகேஷ், ஸ்டீபன், விமல், சரத், வேல்முருகன் ஆகிய 6 பேர் காசிமேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் உளவுத் துறை போலீஸார், வியாசர்பாடி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியனை எச்சரித்தும், அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதால்தான் கொலை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது சரண் அடைந்த ரவுடி லோகேஷுக்கும் திவாகரனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கொலைக்கு முன்தினம் லோகேஷின் நண்பர் விமலை, திவாகரன் முட்டி போட வைத்து தண்டித்துள்ளார். இதனால், மேலும் பகை அதிகரித்துள்ளது. மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிந்த உளவுப்பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸார், காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியனை முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு எச்சரித்தனர். ஆனால், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து கொலைச் சம்பவத்தை தடுக்கத் தவறியதாக இசக்கி பாண்டியனை ஆயுதப்படைக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x