Published : 29 Feb 2020 07:17 AM
Last Updated : 29 Feb 2020 07:17 AM
தென் மாநிலங்களில் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என, தென்மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தென் மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கத்தின் 26-வது நிர்வாகக் குழு கூட்டம் நேற்று முன்தினம், வேலப்பன்சாவடியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கோபால், பொதுச் செயலாளர் சண்முகப்பா, பாண்டிச்சேரி மாநிலத் தலைவர் செந்தில்குமார், தெலங்கானா மாநிலத் தலைவர் பாஸ்கர் ரெட்டி, கேரள மாநிலத் தலைவர் ஹம்சா, தமிழக லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், “தென் மாநிலங்களில் உள்ள 112 சுங்கச் சாவடிகளில், பெரும்பாலானவற்றில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, தென் மாநிலங்களில் காலாவதியான அனைத்து சுங்கச்சாவடிகளையும் மத்திய அரசு மூடவேண்டும். அவ்வாறு மூடாவிட்டால் தென் மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்.
நெடுஞ்சாலைகளில் பெருகிவரும் விபத்துகளை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்கள் ஓய்வு எடுக்கும் இடங்களை அதிகரிக்க வேண்டும். மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும். டீசல் விலையை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும்.
பல இடங்களில் 4 வழிச்சாலைகளை 6 வழிச் சாலைகளாக மாற்றும் பணி முடிவடையாத நிலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்” என தென் மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்க நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT