Published : 29 Feb 2020 07:39 AM
Last Updated : 29 Feb 2020 07:39 AM

படப்பிடிப்பில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க பரிசீலனை: அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

கோவில்பட்டி

‘சினிமா படப்பிடிப்பின்போது விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுவோருக்கு உரிய நஷ்டஈடு தருவதற்கான வழிமுறைகள் குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது' என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என, தமிழக அரசு முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆலை மூடி சீல்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதுகுறித்து, நீதிமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் திரைப்படக் குழுவினருக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்கி வருகிறது. சில படத் தயாரிப்பு நிறுவனங்கள், எந்தத் தகவலையும் அரசுக்கு தெரிவிக்காமல் படப்பிடிப்பை நடத்துகின்றன. அதனால்தான் விபத்துகள் நடந்துள்ளன.

திரைப்படத் துறையினர் காட்சிகளை படமாக்குவதற்கு மட்டும்தான் அரசிடம் அனுமதி பெறுகின்றனர். அதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் உறுதித்தன்மை குறித்தும், வெளிநாட்டைச் சேர்ந்த கிரேன் உள்ளிட்ட இயந்திரங்களை பயன்படுத்தப்படுவது குறித்தும், அரசு ஆய்வு செய்யும்.

படப்பிடிப்பில் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உரிய நஷ்டஈடு தருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக, அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்றார் அமைச்சர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x