நுங்கம்பாக்கத்தில் விமரிசையாக நடந்தது பால விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா- ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பால விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று  நடந்தது. கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றுகிறார் காஞ்சி காமகோடி பீடாதிபதி  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.படம்: க.பரத்
சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பால விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றுகிறார் காஞ்சி காமகோடி பீடாதிபதி  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.படம்: க.பரத்
Updated on
1 min read

நுங்கம்பாக்கம் பால விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் பால விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை மற்றும் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை இணைந்து இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தன.

இதையொட்டி, கடந்த 2 நாட்களாக கோயிலில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

கோயில் கோபுர கலசத்தின் மீது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனிதநீரை ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை தலைவர் ஏ.சி.முத்தையா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

பின்னர் மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பால விநாயகர் அருள்பாலித்தார்.

இதைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காஞ்சி காமகோடி மடத்தின் முன்னாள் பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருவுருவச் சிலையை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்து மலர் கிரீடம் அணிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in