Published : 29 Feb 2020 07:11 AM
Last Updated : 29 Feb 2020 07:11 AM

வெளிநாடுகளில் இருந்து வந்து 28 நாட்களாக கண்காணிக்கப்பட்ட 786 பேருக்கு ‘கோவிட்-19’ பாதிப்பு இல்லாததால் விடுவிப்பு- சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

‘கோவிட்-19’ பாதிப்புள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்ததால் 28 நாட்கள் கண்காணிக்கப்பட்டு வந்த 786 பேருக்கு பாதிப்பு இல்லை என்பதால், அவர்கள் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் ‘கோவிட்-19’ நோய் பாதிப்புடன் யாரும் மருத்துவமனைகளில் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் 25-ம் ஆண்டு தொடர் சேவை மற்றும் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள நல்வாழ்வு, குடும்ப நல பயிற்சி நிலையத்தில் நேற்று நடந்தது.

இதில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டார். சிறப்பாக செயல்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு, பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எய்ட்ஸ் கட்டுப்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் முதன்மை இடம் பெற்றுள்ளது. தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதில், உலக அளவில் கியூபாவுக்கு அடுத்து, தமிழகம் சிறந்து விளங்குகிறது.

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் தாய் - சேய் தொற்றுகள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளன. பிரசவத்தின்போது தாய் உயிரிழக்கும் விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

‘கோவிட்-19’ (கரோனா வைரஸ்) தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் பாதிப்புடன் யாரும் மருத்துவமனைகளில் இல்லை. வைரஸ் பரவியுள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். புதிதாக எந்த நாடுகளில் வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார மையம் சொல்கிறதோ, அங்கிருந்து வருபவர்களும் பரிசோதனை செய்யப்படுகின்றனர். இதுவரை சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 28 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட 786 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x